Tuesday, 4 August 2015

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமை


சமூகத்தில் முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள் சமூகத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவையாக, சரியானவையாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்வதில் மக்கள் பின் நிற்கின்றார்கள்.





காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கள், நடைமுறைகள் போன்றவற்றையே தொடர்ந்து பின்பற்ற மனிதர்கள் பழக்கப்பட்டு விடுகிறார்கள். புதிதாக கொண்டுவரப்படும் நடைமுறைகள், சொல்லப்படும் கருத்துக்கள் பயன் மிக்கதாக இருந்தாலும் பழையனவற்றிலிருந்து மாறுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். கருத்துக்களின் உண்மை நிலை, யதார்த்தம் என்பவற்றை புரிந்து கொள்ளாத நிலை அல்லது புரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டாத நிலை, சாத்தியப்பாடு தொடர்பான ஐயம், தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் என்பன  இதற்கு முக்கிய காரணங்களாகக் காணப்படுகிறது. 


சமூகத்தில் மூத்த தலைமுறையினரால் ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறைகளை சார்ந்து இருப்பது இலகுவாக இருப்பதாக சில இளம் சமுதாயத்தினர் எண்ணுகின்றனர். இதனால் புதிய எண்ணங்கள் சிந்தனைகளை வரவேற்பதில் ஆர்வமற்ற நிலையை வெளிப்படுத்துகின்றனர். 




ஒரு விடயத்தை வேறுபட்ட அணுகுமுறையுடன் நோக்கும் ஒருவரை சமூகம் எப்போதுமே அலட்சியப்படுத்தும் நிலையே காணப்படுகிறது. இது இன்று மட்டும் இல்லை நாம் வரலாறுகளில் கண்டு கொண்ட உண்மையும் கூட. ஆனால் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவற்றை நடைமுறைப்படுத்தி, சாத்தியப்படுத்திய பின்னர் ஏற்றுக்கொள்கின்றனர். 




மேற்கத்தேய நாடுகளில் இந்த நிலைமை முற்றிலுமாக மாறி வருகின்றது. புதிய பல முயற்சிகள், கண்டுபிடிப்புக்கள் அந்த நாடுகளில் அதிகளவில் சாத்தியமாவதும், வெற்றி பெறுவதும் இதனாலேயே. நமது சமூகத்தில் இளம் முயற்சியாளர்களின் வரவு குறைவாக இருப்பதற்கு புதிய அணுகுமுறைகள், புதிய எண்ணங்களிற்கான வரவேற்பு மிகக் குறைவாக இருப்பதே காரணமாகும். முன்னர் இருந்ததை விட ஓரளவு மாற்றம் இருந்தாலும் அது பெருமளவில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதும், காலத்தின் தேவையுமாகும்.