Thursday, 10 September 2015

நேர் சிந்தனைகள்

உளவியல் நிபுணர்களால் பெரிதும் சிலாகிக்கப்படும் ஒரு விடயம் நேர் சிந்தனைகள்(positive thinking). வாழ்கையில் நமது எண்ணங்கள் நம்மை வழிநடத்தும், நம்மில் தலையீடு செய்யும் ஒரு காரணியாக காணப்படுகிறது. உளவியல் ரீதியானதும், உணர்வு ரீதியானதும் ஒரு அணுகுமுறையாக நேர் சிந்தனைகள் அமைவதுடன் எமது வாழ்கையின் பிரகாசமான பக்கத்தையும், எதிர்பார்க்கும் நேரான பெறுபேறுகளையும் நோக்கி நம்மை திசை திருப்பவல்லது. இந்த உளவியல் உண்மையானது அநேகமானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இதன் உண்மையான பயன்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களது எண்ணிக்கை இன்றைய சமூகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாக உளவியலாளர்கள் தெரிவிகின்றனர்.

                   
      

நேர் எண்ணங்களால் ஒரு மகிழ்ச்சியான, சந்தோசமான உணர்வுகளை உணர முடியும் என்பதுடன் நமது கண்களில் பிரகாசமும், அதிகளவான உடல் உள சக்தியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியல் ஆராய்ச்சியாளர்கள். மகிழ்ச்சி அல்லாத விடையங்களை தவிர்ப்பதையோ அல்லது கவலையான விடயங்களில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்காக வேறு விடயங்களில் குறிப்பாக இசை, திரைப்படம், வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதையோ குறிப்பதல்ல. மாறாக அச் சூழ்நிலைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை நம்முள் உருவாக்குவதன் மூலம் முகம் கொடுக்க வேண்டும்.



நேர் சிந்தனைகளை புரிந்து கொள்வதற்கும், நம்மிடையே வளர்த்துக் கொள்வதற்கும் சுய உரையாடல்(self-talk) சிறந்த ஆரம்பம். சுய உரையாடல் அல்லது சுய பேச்சு என்பது எமக்குள் வற்றாத நதி போல முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பேசப்படாத எண்ணங்களை(unspoken thoughts) குறிக்கும். இந்த தன்னிச்சையாக எழும் எண்ணங்கள் நேர்மறையானதாகவோ இல்லை எதிர்மறையானதாகவோ இருக்க முடியும். சில எண்ணங்கள் தர்க்கமானதாகவும்(logical), காரணங்களை கொண்டதாகவும்   இருப்பதுடன் வேறு சில தகவல் குறைபாடுகளினால் எழுந்த தவறான கருத்துருவாக்கங்களாகவும்(misconceptions) காணப்படும். ஓடிக்கொண்டிருக்கும் அநேகமான எண்ணங்கள் எதிர்மறையானவையாக காணப்படுமாயின் வாழ்க்கை தொடர்பான நமது கண்ணோட்டம் நம்பிக்கையற்றதாக(pessimistic) காணப்படுகிறது. மாறாக நேர்மறையாக காணப்படுமாயின் எல்லாம் நன்மைக்கே என்ற அல்லது நன்னம்பிக்கை(optimist) சிந்தனை கொண்டவர்களாக இருப்போம். நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது சுய ஆய்வு(self study) செய்ய வேண்டியது அவசியம். எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை கவனித்து வந்தாலே அவற்றை நேர் சிந்தனைகளாக மாற்ற முடியும். 




நேர் எண்ணங்களை அதிகரிப்பதற்கு நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய, மன நிறைவு அல்லது திருப்தியை தரக்கூடிய, நமக்கு பிடித்த ரசனையான விடயங்களில் நேரத்தை செலவழிக்கலாம். எத்தகைய செயற்பாடுகள் மீது நாம் அதிகளவில் ஆர்வமாக இருப்போம் என்பது நமக்கே தெரிந்த ஒன்று. உதாரணமாக இசையை ரசித்தல், புத்தகம் வாசித்தல், பிடித்த நபருடன் நேரத்தை செலவழித்தல், பிடித்த திரைப்படங்களைப் பார்த்தல்.



தங்களுடைய திறமைகள் மீது நேர் அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை. அவர்கள் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாக தம்மை சுற்றி இருக்கும் மனிதர்களை புரிந்து கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்படத் தெரிந்தவர்கள். எந்தவொரு வெளிக் காரணிகளையும் அவர்களை துக்கப்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். 

நோர்த் கரோலினா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா ப்ரெட்ரிக்ஸன் (Barbara Fredrickson) என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு உளவியல் ஆய்வு அறிக்கையானது நேர் சிந்தனைகள் தொடர்பில் பல ஆச்சரியமான தகவல்களை வழங்கி உள்ளது. அதற்கான சுட்டி இங்கே http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1693418/pdf/15347528.pdf 



"உங்களுடைய எண்ணங்கள் தொடர்ச்சியாக எதிர்மறையானதாக இருக்குமானால் நீங்கள் எதிரான சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். தொடர்ச்சியாக உங்களுக்கு வேண்டாத விடயங்களில் கவனம் செலுத்தி அல்லது அவற்றைப் பற்றி அதிகளவில் பேசுவதால் உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்கள். ஆகவே நீங்கள் எப்போதும் எதிர்மறையான நினைப்புக்களை கொண்டவராக இருந்தால் நேர்மறையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் மேரி ஏஞ்சல் என்னும் உளவியல் நிபுணர்.

1 comment: