Tuesday, 23 June 2015

நின்னருகில்தானே....

உரசாமல் நீ சொல்லும் காதலை
உரசலில்லாமல் நான் உணரும் தருணம் - நம்
உயிர்கள் மட்டும் உரசிச்சென்றது

கற்றதும் வந்துவிடும்
இலக்கணத் தமிழ் போல - நீ
உற்றதாய் உணர்ந்ததும் - உன்
நினைவுகள் வந்து என் உள்ளம் வருடும்

உன்னிடம் வரும் போது
பேச நினைக்கும் வார்த்தைகளை
என் மனம்
ஆசையாய் அசை போட்டபடி
வந்தாலும்
உன் கரம் பற்றியதும்
கடவுளிடம் வேண்டுதல்கள் ஏதுமில்லா
தீவிர பக்தனைப் போல்
வெகுளியாய் என் வார்த்தைகள்
ஒதுங்கிப் போகின்றன

பற்றிய கரம் தனை விட்டதும் தவித்து
கற்ற மொழியும் கரைந்து
வெற்று நிலையில் - மனம்
அற்றுப் போகையில்
தலைமீது உன் கரம்
உணர்வேன்

நிலைத்து விடுவாயென
நினைவில் இருத்தியே
பேசக் கூடாமல்
ஊனம் நேர்ந்தது போல்
நேசப் பார்வை காட்டுவாய்
என்னுயிர் உனதாகியதை
அறிந்தேன்

உடைந்து செல்லும்
மண் துகளாய் மாறிடினும்
அடைந்து நிற்பேன் - என்றும்
நின்னருகில் தானே!

No comments:

Post a Comment