சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் அவற்றில் நம்மை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்கள் இப்போதும் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஆழப் பதிந்திருக்கும். சிறுவயதில் புத்தகங்கள் நம்மில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு அற்புதமான கனவு உலகில் இருப்பதைப் போன்றது. அந்த உலகத்தில் பறப்பது, சுற்றித் திரிவது என்பன அந்த வயதில் அலாதியான ஒன்று.
பாடப் புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வத்தை விட ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்றவற்றை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அம்மாவுடன் நகர்ப்புறம் போகும் போதெல்லாம் இவற்றில் எதோ ஒன்றை வாங்கி விடுவேன்.
ராணி காமிக்ஸ் புத்தகங்களில் மாயாவி கதாபாத்திரம், அதன் சாகசங்கள் புத்தகம் படித்து முடித்த பிறகும் மனம் முழுவதும் நிறைந்து அடுத்த புத்தகத்தை படிப்பதற்கான ஆவலை இன்னும் தூண்டிக்கொண்டே இருக்கும். இலத்திரனியல் சாதனங்கள் எதனுடைய தொந்தரவும் இன்றி மாயாவியின் மாய உலகத்தில் சஞ்சரித்த அந்த நாட்கள் அழகானவை.
அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற புத்தகங்களில் வரும் அரச கதைகள், கதாபாத்திரங்கள் என்வற்றின் மூலம் அரச கதைகள், பழைய வரலாறுகள் என்பவற்றை தேடிப் படிப்பதற்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அந்தக்காலத்து மனிதர்களின் பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள் என்பன அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின் ஈர்ப்பு கதைகளை படிக்கும் போது நம்மை பழைய காலத்தில் சஞ்சரிக்க வைக்கும் வல்லமை மிக்கவை.
சிறுவயதின் பசுமையான அந்த வாசிப்பனுபவங்களை இன்று நினைத்தாலும் கூட இனம்புரியாத சிலிர்ப்பும், இன்பமும் மனதில் தோன்றி விடுகின்றன.


No comments:
Post a Comment