மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகுநாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன் கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்து விட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்க ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேநீர் அருந்திக் கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
*****
கோடை தான்
வெயில் இல்லை.
மழை
நீங்கள் பாடுங்கள்
நான் கேட்கிறேன்.
*****
வாகை மரத்தடியில்
நனையாத ஓதுங்கல்.
உருண்டோடிக் கிடந்த
வேற்று நுங்கு முக்கண்களில்
விழுந்து நிரம்பித் தெறித்தது மழை.
ஒரே ஒரு சிறுகணம்.
எத்தனை முழுமையாகிவிட்டது
இந்த உலகனைத்தும்.
*****
மேஜையை நகர்த்திப் போட்டதும்
மழை கோபித்துக் கொண்டு
உரத்த சுருதியில்
பெய்ய ஆரம்பித்தது.
வேறொருவர் உடையதைப் போல
முகம் மாறிவிட்டிருந்தது
என்னுடைய அறை.
ஒரு சிறு நிம்மதி
மூடாமல் வைத்திருந்த என் பேனா
இன்னும் எதோ அதே போக்கில்
எழுதிக் கொண்டு இருக்கிறது.
*****அழகாக இருந்தது
பேரூந்து ஜன்னலில் இருந்து
ஈரம் வழியும்
கோபுரம் பார்க்கையில்.
துயரமாக இருக்கிறது
நனைந்தபடியே மயானம் செல்லும்
நான்கு தோள் நடுவொரு
முகம் பார்க்கையில்.
*****
அத்தனை பெரிய நீல வானம்
சிறியதொரு கருங்குருவி
எவ்வி எவ்வி எவ்வி
மேலேறித் திரிந்ததிலா
மேகம் கருத்துவிட்டது?
இதோ நான் முற்றிலும் நனைய,
முன் ஓடுகிறது
மழைக் கொப்புளங்கள்
*****
வீட்டிலிருந்து பள்ளிகூடத்திற்கு
நடப்பது போல,
காட்சிகளுக்கும்
கவிதைக்கும் இடையில்
இந்த மழை நாளில்
நடந்து கொண்டே இருக்கிறேன்.
இப்போதைக்கு நனைந்தால்
போதும் எனக்கு
அப்புறம் யாரிடமேனும்
கற்றுக் கொள்ளவும் சம்மதம்.
*****
வெயிலை விடவும்
வெளிச்சமாக இருக்கிறது
மழைக்குப் பின் பரவும்
மஞ்சள் 'ஒளிச்சம்'
*****
மழைக்கால மரணம் வேறு மாதிரி
மழைக்கால மயானம் வேறுமாதிரி
மழைக்காலக் கள் மண்டபம் வேறுமாதிரி
மழைக்கால ஆறு வேறுமாதிரி
மழைக்காலமே வேறு மாதிரிதான்.
*****
தூறலைத் துள்ளும் மீன் என
நினைத்ததோ?
காலை மழையில்
பார்வைக் கம்பியில்
இரண்டு மீன் கொத்திகள்.
நாள் முழுவதும் இனிமேல் ஒரு
நதி நடந்து வாழும்
எனக்கு முன்னே.
*****
பெய்தபடி இருந்த பெருமழை
சொட்டிக்கொண்டு இப்போது.
எப்போதோ வாழ்ந்திருந்த வீட்டின்
யாருமில்லா புறவாசல் வாழையிலை
நரம்பு முற்றிய நினைவின் மேல்
விழுந்து விழுந்து அது தெறிக்கும்
சத்தத்தில் சரிகிறது என்
நிகழ்காலத்தின் நெடுஞ்சுவர்கள்.
தாழ்ந்து, அசையாத் தவமியற்றும்
வேம்புக் கிளையமர் ஈரப் பறவை
சிறகுதறி, பறத்தலுக்குத் தயாராவதை
பார்க்காமல் இல்லை நான்.
இதோ எழுகிறது என் கோபுரம்
மறுபடியும்.
*****
மழை
எங்காவது
யாரையாவது
ஏதாவது செய்துகொண்டேதான்
இருக்கிறது.
*****
மீண்டும் மழை பெய்யப் போகிறதாக
மாயம் செய்யும் இந்த இரவுதான்
என் கடைசி இரவாக இருக்குமோ?
அப்படி நினைத்துக் கொள்ளும்படி
நிறைவாக இருக்கிறது
நேற்றைய முதல் மழைக்குப் பிந்திய
தாழ்வாரப் பூச்சிகளின்
குழல் விளக்கு மொய்ப்பு.
இத்தனை சிற்றுயிரிகளின்
கூட்டுப் பரசவத்தில் உண்டாகும் என்
அகால இறப்பு ஒரு பொருட்டில்லை.
என் கடைசி இரவில் மழை பெய்ததா
என்று தெரியாமல் போகும்
ஈரமற்ற ஒரே ஒரு பதிலின்மை தவிர.
*****
மழை கூட்டிச் சென்றது. சென்றேன்.
அது காக்கப்பட்ட பகுதி என அறிந்தேனில்லை.
எப்புறமும் மழை நீலம்.
இருபுறமும் தேக்கிய நீர்த் தளும்பல்.
மழை ஏன் சங்கிலிகளை அறுத்தது.
என் உடைகளைக் களைந்தது
என்னைத் துலக்கியது
மழைக் கோட்டு அணிந்த காவலர் வந்து
அதிகாரக் குரலில் விசாரித்தார்.
தேவை இல்லை என சமவெளியால் எறியப்பட்ட
கூழாங்கல் நான் என்றேன்.
என் குரல் மிகக் குளிர்ந்தும்
பரிசுத்தமாகவும் இருந்தது.
*****
வெளியூரிலிருந்து வந்தவுடன் கேட்டேன்
'நான் ஊரில் இல்லாத போது மழை பெய்ததா?'
'ஒரு சொட்டுக் கூட இல்லை'
உதடு பிதுக்கினார்கள்
'எனக்கு அப்பிடித் தோன்றிற்று'
அடர்ந்த வருத்தம் என் குரலில்.
சிரிப்பை வெளியே காட்டவில்லை
பதிலற்ற எதிர்முகங்கள்
இப்போதும் கூட நினைக்கிறேன்
'நான் இல்லாத சமயம்
மழை பெய்ய வைக்கும் ஒரு ஊருக்கு
எப்படியும் நான் போய் விடவேண்டும்'
*****
முந்திய ஊரில்
மழை பெய்திருக்க வேண்டும்.
நனைந்த அரக்குச் சிவப்புடன்
நகர்ந்துகொண்டே போகின்றன
அடைத்த மரக்கதவுக்கு அப்புறம்
கூட்ஸ் வண்டிப் பெட்டிகள்
அடுத்து வரப்போகும்
ஆளற்ற ரயில் கேட்டில்
கன்றுக் குட்டியுடன் மனச்சணத்தி மரத்தின் கீழ்
நிலம் அதிர நின்று பார்க்கும் ஒருத்தி வரை
உலராது இருக்கா வேண்டும்
ஊர் விட்டு ஊர் செல்லும் மழை.
*****
தலை துவட்டவில்லை
ஒரு நனைந்த
தாவரம் போல இருக்கிறேன்
இன்று மாலை
இங்கே முதல் மழை.
*****
நான் இன்று ஒரு நாய்க்குடை
குவிந்து கிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள்
மலைக்கு ஒதுங்கி நுழையும்
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மலையில் நனைந்தசையும்
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில்
இழுத்துச் செல்லப்படும்
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின்
மாறாத முகச்சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல
மழையின் மாறுவேடம்.
(இதை 25.11.2011 இல் எழுதியிருக்கிறேன். அன்று மழை பெய்திருந்ததா தெரியவில்லை. பெய்திருக்கலாம். ஆனால் மழையைப் பற்றி எழுதுகிற அன்றைக்கு கட்டாயம் மழை பெய்திருக்க வேண்டிய அவசியமில்லை.)
*****
தெருவோரம் உதிர்ந்த
ஒற்றைத்
தேக்கு இலையில்
அடர் மழையின்
துளி விழுந்து துளிவிழுந்து
துடிக்கிறது
பெரும் வதையில்.
*****
ஒரு நனைந்த
தாவரம் போல இருக்கிறேன்
இன்று மாலை
இங்கே முதல் மழை.
*****
நான் இன்று ஒரு நாய்க்குடை
குவிந்து கிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள்
மலைக்கு ஒதுங்கி நுழையும்
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மலையில் நனைந்தசையும்
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில்
இழுத்துச் செல்லப்படும்
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின்
மாறாத முகச்சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல
மழையின் மாறுவேடம்.
(இதை 25.11.2011 இல் எழுதியிருக்கிறேன். அன்று மழை பெய்திருந்ததா தெரியவில்லை. பெய்திருக்கலாம். ஆனால் மழையைப் பற்றி எழுதுகிற அன்றைக்கு கட்டாயம் மழை பெய்திருக்க வேண்டிய அவசியமில்லை.)
*****
தெருவோரம் உதிர்ந்த
ஒற்றைத்
தேக்கு இலையில்
அடர் மழையின்
துளி விழுந்து துளிவிழுந்து
துடிக்கிறது
பெரும் வதையில்.
*****








